ஜெயேந்திரக் கொழுப்பு
எழுதியவர் மாதவராஜ் எழுதப்பட்டது 10:23 AM அடைமொழி அயோத்தி, அரசியல், இந்துத்துவா, சங்கராச்சாரியார், செய்திகள், நிகழ்வுகள்
தண்டத்தோடு வாய்தாவுக்கு அலைந்து கொண்டிருந்த ஜெயேந்திரர் என்றழைக்கப்படும் சுப்பிரமணி, இதோ திரும்பவும், காவி படிந்து நாற்றமெடுக்கும் தனது திருவாய் மலர்ந்தருள ஆரம்பித்திருக்கிறார். 2.10.2010 தினத்தந்தியில் ‘ஜெயேந்திரர் கருத்து’ என செய்தி வந்திருக்கிறது.
“இந்த வழக்கில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3ல் ஒரு பகுதி நிலத்தில் மசூதி கட்ட அனுமதிப்பீர்களா?” என்று பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
“அதை முஸ்லீம்களே விரும்பமாட்டர்கள். முஸ்லீம்களுக்கு அயோத்தியில் 7 மசூதிகள் உள்ளன. இதனால் இன்னொரு மசூதியைக் கட்ட விரும்பமாட்டார்கள்”
அவர்கள் விரும்பக்கூடாது என்பதுதான் இதில் உள்ள செய்தி. இந்துக்களும், முஸ்லீம்களும் இணக்கமாக வாழ வேண்டும் என்கிற தொனியில்லாமல், இந்துக்களோடு முஸ்லீம்கள் அனுசரித்துப் போக வேண்டும் என்கிற அரசியலும் இந்த வார்த்தைகளுக்குள் இருக்கிறது.
இருக்கிற மசூதிகள் முஸ்லீம்களுக்கு போதும் என்று சொல்லியவர், அடுத்து மேலும் சில படிகள் ஏறிச் செல்கிறார்.
“முஸ்லீம்கள் தொழுகை நடத்துவதற்கு என்று இன்னொரு மசூதி தேவையில்லை. அவர்கள் எந்த இடத்திலிருந்தும் மெக்காவை நோக்கி தொழுகை நடத்த முடியும்”
ஆக, முஸ்லீம்களுக்கு மசூதியே தேவையில்லை என கடைசிப்படியில் நின்று சொல்லியே விடுகிறார்.
ராமன் இருக்குமிடம் அயோத்தி என்பது, சீதைக்கு மட்டுமல்ல, அவரை நேசிக்கிற பக்தர்கள் அனைவருக்குமான தெளிவுதானே. அப்படியானால் ராமர் வேறு எங்குமே இல்லையென்பதை இந்த ‘பீடாதிபதிகள்’ ஒத்துக்கொள்கிறார்களா? அப்புறம் நாடு முழுவதும் எதற்கு ராமர் கோவில்கள்? அயோத்தியில் ஒன்றைக் கட்டிவிட்டு அந்தத் திசையை நோக்கிக் கும்பிட்டபடி ‘சிவனே’ என இவர்களால் இருக்க முடியுமா?
பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். சாமி சிலை இருக்கும் திசையில் ஒரு பாட்டி கால் நீட்டி உட்கார்ந்திருப்பார். அப்படி நீட்டக்கூடாது என பூசாரி சொல்வான். அப்படியென்றால் வேறு திசையில் உன் தெய்வம் இல்லையா என பாட்டி கேட்பார். அந்தப் பூசாரி மௌனமாகிப் போவான்.
இந்தப் பூசாரிகள் மௌனமாகிப் போக மாட்டார்கள்.
நண்பர் மயிலை பாலு அவர்கள், இந்தச் செய்தியை குறிப்பிட்டு, தீக்கதிர் பத்திரிகையில் எழுதி, “இந்தக் குசும்புதானே வேணாங்குறது..” என முடித்திருக்கிறார்.
இது குசும்பு இல்லை, கொழுப்பு.
நன்றி:தமிழ்மனம்..மாதவராஜ்
No comments:
Post a Comment